Wednesday 13 May 2020

வரலாற்றுத் திருப்புமுனை தந்த 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள்

1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் இரவு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நடவடிக்கைக் குழுக்கூட்டம், சென்னை ஏ.வி.நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
         முதல்வர் கலைஞர் சங்கப் பிரதிநிதிகளை 03-12-1969 காலை 10 மணிக்கு முதல்வர் அறையில் சந்திக்குமாறு அழைப்பு அனுப்பியிருந்தார்.பொதுச்செயலர் முத்துசாமிக்கு எழுதிய அக்கடிதம் பரிசீலிக்கப்பட்டது.அப்போது பொதுச்செயலராகிய நான் முதல்வருடைய செய்தி அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, "முதல்வரை சந்தித்துப் பேச தயாராக ஆசிரியர் கூட்டணி உள்ளது" என கடிதம் எழுதியதாகவும், அதற்கு முதல்வரிடமிருந்து பதில் வந்துள்ளது என்றும் கூறினேன்.(செ.முத்துசாமி)
பலரும் மகிழ்ந்தனர். நடவடிக்கைகுழு என்பது மாவட்டத்தலைவர்- செயலர் அடங்கியது ஆகும்.
             மதுரை மாவட்ட செயலர் திரு.ஜே.எஸ்.இராசு முதல்வருக்கு, நடவடிக்கைக் குழுவைக் கேட்காமல் கடிதம் எழுதியது தவறு என்று கடுமையாகப் பேசினார்.பொறுமையாக இருந்த மணி அய்யர்( செங்கல்பட்டு மாவட்ட செயலர்) எழுந்து மீண்டும் கடிதத்தை படிக்குமாறு சொன்னார்.நான் (செ.முத்துசாமி) படித்தேன்.' பொதுச்செயலர் கடிதம் பற்றி முதல்வர் கடிதம் ஒன்றும் கூறவில்லை. அந்த குறிப்பு இல்லாத போது தான் எழுதிய கடிதத்தை சொல்லாமல் முத்துசாமி மறைத்திருக்கலாம்.ஆனால் அவர் உண்மையுடன் நடந்ததைக் கூறினார். ஆதலின் இராசு பேசுவது மிகத் தவறு" என்று கூறி இராசுவை கடுமையாக சாடி விட்டார்.காலை முதல்வரை சந்திக்க முடிவு செய்தோம். மறுநாள் 03-12-1969 காலை 10 மணிக்கு முதல்வர் அறைக்கு 18 பேர் சென்றிருந்தோம்.அத்தனை பேர்களுக்கும் முதல்வர் அறையில் நாற்காலிகள் போடப்பட்டு அமர்ந்தோம்.நாவலரும் இருந்தார்.முதல்வர் கலைஞர் கனிவுடன் பேசி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டார்.டிசம்பர் 29 ல் மாநாடும் சைக்கிள் அணியும் சென்னையில் நடத்துவது என்று முடிவு செய்திருந்த நேரம்.இதை முதல்வரிடம் கூறினோம்.மாநாடு நடத்துங்கள்.சைக்கிள் அணி வேண்டுமானால் உங்கள் இயக்க வளர்ச்சிக்கு நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
            மாநாடு- சைக்கிள் அணி பற்றி இறுதி முடிவு செய்ய 07-12-1969 ல் தஞ்சை கரந்தை ஐ.கே.நடுநிலைப்பள்ளியில் மாநில பொதுகுழு நடைபெற்றது. எழுச்சியுடன் மாநிலப் பொதுக்குழுவினர் கூடினர்.திரு.எ.எல்லண்ணா தலைமை வகித்தார்.கூட்டம் தொடங்கியதிலிருந்து மாநாடு நடத்தலாம் என்று எல்லாரும் ஏற்று வாதாடினர்.சைக்கிள் அணி நடத்தவேண்டும் என்று ஒரு பிரிவும், சைக்கிள் அணி கூடாது என்று ஒரு பிரிவும், வேகமாகமான வாதங்களில் இறங்கினர்.சைக்கிள்அணி நடத்தியே தீரவேண்டும் என்ற வாத அணிக்கு மதுரை மாவட்டச் செயலர் திரு.ஜே.எஸ்.இராசுவும், சைக்கிளணி கூடாது என்ற வாத அணிக்கு தஞ்சை மாவட்டச் செயலர் திரு.க.மீனாட்சிசுந்தரமும் தலைமை ஏற்று கடுமையான உணர்ச்சி வயப்பட்ட உக்கிரமான வாதத்தில் மாறி மாறி இறங்கிவிட்டனர்.தலைவர் திரு.எ.எல்லண்ணா தடுமாறிப் போனார்.
          மதியம் உணவை சிறப்பாக தஞ்சை மாவட்டக்கிளைக் செய்திருந்தது.உணவுக்குப்பின் பிற்பகல் பொதுக்குழு கூடியது.மீண்டும் கடுமையான எதிர்வாதங்கள் சூடேறியது.ஒரு கட்டத்தில் அமைதியாக கவனித்து வந்த நான்(செ.முத்துசாமி) இயக்கம் அன்றே உடைந்துவிடுமோ என்று அச்சப்பட்டேன்.இதற்கு மேலும் வாதம் சென்றால் உடைவது உறுதி என்று முடிவு செய்த நான்(செ.முத்துசாமி) எழுந்து பொதுக்குழுவைப் பார்த்துக் கேட்டேன்.என்ன இராணுவ தளபதி போல் ஏற்று நான் அறிவிக்கும் முடிவை ஏற்பதானால் முடிவு கூறத்தயாராக உள்ளேன் என்று அழுத்தமாக கூறினேன்.
                     கூட்டம் நிசப்தமானது.ஒவ்வொரு மாவட்டச் செயலாளராக முன்வந்து பொதுச்செயலர் அறிவிப்பை ஏற்க உறுதி அளிக்குமாறு கோரினேன்.சற்றும் தாமதமின்றி உடனே திரு.ஜே.எஸ்.இராசு முன்வந்து திராவிடநாடு கொள்கையை அண்ணா கைவிட்டது போல பொதுச்செயலர் சைக்கிள் அணி வேண்டாம் என்று முடிவு கூறினாலும் ஏற்கத் தயார் என்றார்.அடுத்து வேகமாக திரு.க.மீனாட்சிசுந்தரம் முன்வந்து" இதோ என் கால் ஒடிந்து கட்டுப் போட்டுள்ளேன்.பொதுச்செயலர் சைக்கிள் அணி நடத்தவேண்டும் என்று அறிவித்தால் இந்த ஒடிந்த காலுடன் சைக்கிள் அணிக்கு தலைமை ஏற்று வருவேன்" என்று உறுதியுடன் கூறினார்.
                 பின் ஒருவர் ஒருவராக செங்கை மாவட்டச் செயலர் பெரியவர் மணி அய்யர் வரை உறுதி கூறி அறிவித்தனர்.தென்ஆற்காடு மாவட்டச் செயலர் திரு.அப்துல் மஜித் மட்டும் அறிவிக்க மறுத்துவிட்டார்.எவ்வளவு பேர் சொல்லியும் கேட்கவில்லை.இதன் பின்னர் தென்னாற்காடு மாவட்டத்தலைவர் திரு.செல்லமுத்து முன்வந்து மாவட்ட சார்பில் உறுதி அளித்தார்.
                           இதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணிக்கு மேல் விளக்கமளித்து இறுதியில் சைக்கிளணி நடத்தவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி முதல்வர் கலைஞர் கூறியதையும் குறிப்பிட்டு சைக்கிளில் சென்னையை நோக்கி நடத்தவேண்டும் என்று இப்பொதுக்குழு முடிவு செய்கிறது என்று தீர்மானத்தை நான் மொழிந்தபோது கட்டடம் அதிர்ந்து போன கைதட்டல் இன்னும் என் நினைவில் நிற்கிறது.

எழுதியவர்: எஸ்.எம்.

பொன்விழா மலரிலிருந்து...
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment